மஞ்சூர்: மஞ்சூர் அருகே தேர்தல் விதிமீறி தையல் இயந்திரம் வழங்குவதாக பெண்களிடம் விண்ணப்பம் பெற்ற பா.ஜ.வினரை, தி.மு.க.வினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே கரியமலை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பா.ஜ. நிர்வாகிகள், அப்பகுதியை சேர்ந்த பெண்களிடம் இலவச தையல் இயந்திரம் வழங்க உள்ளதாகவும், அதற்காக விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் நகல், 3 போட்டோ பெறுவதாகவும் தி.மு.க.வினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் அங்கு சென்று பெண்களிடம் விண்ணப்பங்களை பெற்று கொண்டிருந்த பா.ஜ. நிர்வாகிகளை, தடுத்து நிறுத்தினர். அப்போது தி.மு.க., பா.ஜ.வினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அங்கு வந்த மஞ்சூர் எஸ்.ஐ. ராஜ்குமார், வி.ஏ.ஓ. மோகனபிரியா, ஆகியோர் பா.ஜ. நிர்வாகிகளிடம் இது குறித்து விசாரணை நடத்தி, விண்ணப்பங்களை கைப்பற்றினர். தொடர்ந்து இது பற்ற விசாரணை நடக்கிறது.