திருவள்ளூர்: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பாக செயல்பட்ட பெண்களுக்கு கேடயத்தை போலீஸ் எஸ்பி அரவிந்தன் வழங்கினார். உலக மகளிர் தினம் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண் கல்வி, பாலியல் பலாத்காரம், பெண் குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தம் போன்ற செயல்களில் சிறப்பாக செயல்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள், காவல்துறையை சேர்ந்த பெண் காவலர்கள், தொண்டு நிறுவன சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் கேடயங்களை வழங்கி பாராட்டினார். இதில், பாலியல் பலாத்காரம் குறித்து பெண் காவலர் சசிகலா பாடிய விழிப்புணர்வு பாடல் சமூக வலைதளங்களில் வைரலானதால் அவருக்கும், வேலகாபுரம் கிராமத்தில் பெண் கல்வி பெண் குழந்தை தொழிலாளர் மீட்பு, குழந்தை திருமணம் தடுத்து நிறுத்துதல் போன்ற செயல்களில் சிறப்பாக செயல்பட்டதாக அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி நர்மதாவுக்கும் கேடயம் வழங்கி பாராட்டினார்.