சென்னை: குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு முதல் வட கடலோர கேரளா வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும், ஏனைய தென் மாவட்டங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் வடதமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நாளை மறுநாள் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தென் மாவட்டங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும். மேலும் வடதமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை அமையம் தகவல் தெரிவித்துள்ளது.
அடுத்த இரு தினங்களுக்கு கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து காணப்படும். அதனையடுத்து சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் முற்பகலில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும் அதன்பிறகு தெளிவாகவும் காணப்படும். காலை நேரங்களில் இலேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.