திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக முதல்வர் சார்பில் தொடரப்பட்ட மேலும் ஒரு அவதூறு வழக்கு ரத்து!: ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீதான மேலும் ஒரு அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக தமிழக அரசால் தொடரப்பட்ட அவதூறு வழக்கு எல்லாம் ரத்து செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் மீது தொடரப்பட்ட 8 அவதூறு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் மேலும் 6 வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. குறிப்பாக, வணிகர் சங்க பேரவை தலைவர் விக்கிரமராஜா இல்ல திருமண விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், அதிமுக அரசு வன்னியர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டு தொடரப்பட்ட வழக்கு என்பதால் இதனை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறார். மேலும், 5 அவதூறு வழக்குகளின் விசாரணைக்கும் இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதேபோல பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் மீதான அவதூறு வழக்கையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அடுத்த மாதம் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: