ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் அமமுகவிற்கு வாக்களிப்பார்கள் : டிடிவி தினகரன் நம்பிக்கை

சென்னை : தமிழகத்தில் உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில் தான் தொடங்க இருப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. முதல் நாளான இன்று சென்னை, திருவள்ளூர், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் டிடிவி தினகரன் நேர்காணல் நடத்தி வருகிறார்.

இந்த நிகழ்வில் பேசிய தினகரன், உண்மையான தர்மயுத்தம் எதிர்வரும் தேர்தலில் தான் துவங்குகிறது என்றார்.சட்டமன்ற தேர்தலில் இம்முறை 2 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக குறிப்பிட்ட தினகரன், இன்னும் 2 நாட்களில் யாருடன் கூட்டணி என்றும் அமமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்தும் அறிவிக்க இருப்பதாக தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி குறித்து பேசிய தகவல்கள் உண்மையில்லை என்றும் தினகரன் குறிப்பிட்டார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் அமமுகவிற்கு வாக்களிப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Stories: