பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே பிரம்மாண்ட அணை கட்டும் சீனா: சீனாவின் 14வது ஐந்தாண்டு திட்டத்தில் புதிய அணை கட்ட திட்டம்..!

பெய்ஜிங்: பிரம்மபுத்திரா அணையின் குறுக்கே பிரம்மாண்ட அணை கட்டுவதற்கான திட்டத்திற்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளது. சீனாவின் 14வது ஐந்தாண்டு திட்டமானது 2021ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. முன்னதாக இதற்கு இந்தியா, வங்கதேசம் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நாடுகளுக்கு வரும் நதி நீரை அணை கட்டி தடுப்பதன் மூலமாக அது சர்வதேச பிரச்னையாக மாறக்கூடும் எனவும் இந்தியா எச்சரித்துள்ளது. அதையும் மீறி சீனா தற்போது அணை கட்ட தயாராகி வருகிறது. அருணாசலப்பிரதேசத்தின் எல்லைப்பகுதியான திபெத்தின் கடைசி மாகாணம், மேடாக்கில் யர்லூங் சாங்போ நதியின் குறுக்கே அணை கட்டப்பட உள்ளது.

பிரம்மபுத்திரா நதியானது திபெத்தில் யர்லூங் சாங்போ என அழைக்கப்படுகின்றது. இது திபெத்தின் மிகுந்த நீர்வளம் கொண்டதாகும். சுமார் 2000 அடி உயரத்தில் இருந்து பாயும் நதி நீர் மூலமாக 7 கோடி கிலோவாட் மின்உற்பத்தி செய்யமுடியும். இதன் மூலமாக சீனாவின் ஒட்டுமொத்த மின் தேவையில் 30 சதவீதம் பூர்த்தி செய்ய முடியும். திட்டத்தின் மூலம் கிடைக்கும் 30,000 கோடி கிலோவாட் மின்சாரம் மூலமாக சீனாவின் கார்பன் வெளியீட்டை குறைக்கும் இலக்கை 2030ம் ஆண்டுக்குள் அடைய முடியும். மேலும் 2060ம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை முழுமையாக நிறுத்தமுடியும் என்று சீனா கூறியுள்ளது.

14-வது இந்தாண்டு திட்டங்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் புதிய அணைக்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 11-ம் தேதி அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. பிரம்மபுத்திரா நதியில் சீனா கட்டும் புதிய அணையினால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் வங்க தேசத்துக்கான நீர் ஆதாரங்கள் பாதிக்கப்படும். இந்தியா சீனா இடையே ஏற்கனவே எல்லை பிரச்சனை நீடித்து வரும் நிலையில் புதிய அணை திட்டம் இரு நாடுகளிடையே பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கும் வகையில் உள்ளது. இந்தியா, வங்கதேசத்துக்கு செல்லும் நதி நீரை அணை கட்டி தடுக்கும் சீனாவின் முயற்சி சர்வதேச பிரச்சனையாக உருவாக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Related Stories: