சொத்துக்குவிப்பு வழக்கில் கிடைத்த சிறைத்தண்டனை காரணமாக, தனது முதல்வர் வேட்பாளர் கனவை, ஜெயலலிதாவின் சமாதியில் சத்திய பிரமாணம் என்ற பெயரில் ஓங்கி அறைந்துவிட்டு பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு சென்ற சசிகலா, போகும்போது எடப்பாடி பழனிசாமியை தனது காலடியில் தவழவிட்டு முதல்வராக்கி சென்றார். அதன் பிறகு அரசியல் காட்சிகள் மாறத்தொடங்க, அமமுகவை உருவாக்கிய தினகரன், அதன் மூலம் சசிகலாவை வைத்து அதிமுகவை மீட்கப்போவதாய் போர்க்கோலம் காட்டினார். இதனால் அவரது பின்னால் அணிவகுத்த 18 எம்எல்ஏக்களின் பதவி காலியாக, அதற்கு இடைத்தேர்தலும் நடந்து முடிந்தது. பதவி பறிகொடுத்தவர்களில் பலர் பல கட்சிகளிலும் ஐக்கியமாக, தினகரன் பின்னால் அணிவகுத்தவர்கள் சின்னம்மா வெளியில் வந்தால் எப்படியும் இலை கட்சி நம்மிடம் வரும் என கனவுலகில் இருந்து வந்தனர்.