கருணை அடிப்படையில் வேலையில் சேர்ந்தவர்கள் பணி நியமனம் வரன்முறை செய்வது எப்படி? தமிழக அரசு உத்தரவு

சென்னை: 2016ம் தேதி முதல் 2019ம் தேதி வரை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணி வரன்முறை செய்வது தொடர்பான வழிகாட்டி நெறிமுறை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கடந்த 2016 பிப்ரவரி 2ம் தேதி 2019 டிசம்பர் 31ம் தேதி வரை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட இளநிலை வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தட்டச்சர் ஆகியோருக்கு எந்த வித விதித்தளர்வு மற்றும் அரசாணைகளுக்கு விலக்கு தேவைப்படாத அனைத்து பணியாளர்களின் பணி நியமனங்களையும் ஒரே அரசாணையில் பணிவரன்முறை செய்ய பரிந்துரை செய்தது.

இதையேற்று கடந்த 2016 பிப்ரவரி 2ம் தேதி முதல் 2019 டிசம்பர் 31ம் தேதி வரை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட பணியாளர்களின் பணி வரன்முறை செய்திட ஏதுவாக வழிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு, எந்த வித விதித்தளர்வு மற்றும் அரசாணைகளுக்கு விலக்கு தேவைப்படாத அனைத்து பணியாளர்களின் பணி நியமனமும் நடைமுறையில் உள்ள விதிகளுக்குட்பட்டு வரன்முறைப்படுத்தப்படும்.

கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட அரசு பணியாளரின் பணியினை வரன்முறை செய்திட உரிய செயல்முறை ஆணை வெளியிட்டு, தொடர்புடைய அரசு பணியாளரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும், கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்ற அரசு பணியாளர்களின் பணியினை வரன்முறைப்படுத்த விதித்தளர்வு, அரசாணைகளுக்கு விலக்கு தேவைப்படும் பணியாளர்களை பொறுத்தவரையில் அவர்களை தற்காலிக அரசு பணியாளர்களாக கருதி நடைமுறையில் உள்ள விதிகளுக்குட்பட்டு தொடர் ஆண்டு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை செயலாளர் முகமது நசிமுத்தின் தெரிவித்துள்ளார். அவரின் உத்தரவை தொடர்ந்து, பொதுப்பணித்துறை  நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி அனைத்து தலைமை பொறியாளர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில், 2016 பிப்ரவரி 2ம் தேதி முதல் 2019 டிசம்பர் 31 வரை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியினை வரன்முறைப்படுத்துதல் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: