7 உறுதிமொழிகளை அளித்தார் மு.க.ஸ்டாலின் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000

ஆண்டுக்கு 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்

29.75 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்

பிற்படுத்தப்பட்டோர், எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை இரட்டிப்பு

வறுமையில் இருந்து 1 கோடி பேர் மீட்கப்படுவார்கள்

சுகாதாரம், கல்விக்கு  நிதி ஒதுக்கீடு 3 மடங்கு அதிகரிப்பு

* எல்லா கிராமங்களிலும் பிராட்பேண்ட் இணைய வசதி

* திருப்புமுனை ஏற்படுத்திய திருச்சி பொதுக்கூட்டம்

சென்னை, மார்ச் 8: குடும்பத் தலைவிகள் அனைவருக்கும்  மாதம்தோறும் ஆயிரம் ரூபாய். ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு  வேலைவாய்ப்புகள், வறுமையில் வாடும் ஒரு கோடி பேரை மீட்டெடுப்பது, கல்வி  உதவித் தொகை இரு மடங்காக உயர்த்தி வழங்குவது, கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட 28 வாக்குறுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் நேற்று நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் வெளியிட்டார்.

தமிழகத்தில் 234 சட்டமன்ற ெதாகுதிக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலை சந்திக்க திமுக முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த நிலையில் வருகிற 10ம் தேதி திமுக வேட்பாளர் பட்டியலும், 11ம் தேதி திமுக தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படுகிறது. இதையொட்டி திமுக சார்பில் 11வது மாநில மாநாடு மார்ச் 14ம் தேதி திருச்சியில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வந்தது.

இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், அந்த இடத்தில் பிரம்மாண்டமான தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளான மார்ச் 1ம் தேதி அறிவித்தார். இக்கூட்டம் ‘தமிழகத்தில் விடியலுக்கான முழக்கம்’ என்ற தலைப்பில் மாநாடு போல நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். திருச்சியில் மாநாடு என்பதே திமுகவுக்கு திருப்பு முனையாக தான் இருந்து வருகிறது. இதுவரை 10 மாநாடுகளில் 5 மாநாடுகள் திருச்சியில் நடைபெற்றுள்ளது. 1970, 1990, 1996, 2006, 2014 ஆண்டுகளில் திருச்சியில் திமுக மாநாடு நடந்துள்ளது. திமுகவை பொறுத்தவரை திருச்சியில் மாநாடு நடந்தால் அது திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருக்கிறது. இந்த நிலையில் 6வது முறையாக 11வது மாநாடு திருச்சியில் தான் நடக்கிறது என்று அறிவிக்கப்பட்டது தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

 இதை தொடர்ந்து, திருச்சியில் சென்னை பைபாஸ் சாலையில் சிறுகனூரில் சுமார் 750 ஏக்கரில் பொதுக் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் 10 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தது. பல லட்சம் தொண்டர்கள் மாநிலம் முழுவதிலும் இருந்து குவிந்தனர். சரியாக மாலை 6.45 மணியளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேடைக்கு வந்தார்.  அவர் மேடைக்கு வந்தவுடன் மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா,  கலைஞர் படத்துக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து  அவர் மேடையின் முன்புறம் இடது, வலது புறங்களில் அமைக்கப்பட்டிருந்த  பிரத்யேக பிரமாண்ட நடைமேடையில் நடந்து சென்று தொண்டர்களை பார்த்து கையை  காட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது அங்கிருந்த தொண்டர்கள்  எழுந்து நின்று மு.க.ஸ்டாலினுக்கு கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.  தொண்டர்கள் கைதட்டல் சத்தம் விண்ணை முட்டும் அளவுக்கு அதிர்ந்தது. தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  ‘மு.க.ஸ்டாலின் 7 உறுதிமொழிகள்’ என்று பெயர் சூட்டிய 10 ஆண்டு தொலை நோக்கு திட்டத்தை வெளியிட்டு பேசினார். மு.க.ஸ்டாலின் அறிவித்த 7 தலைப்பிலான உறுதிமொழிகள் வருமாறு:

வளரும் வாய்ப்புகள், வளமான தமிழ்நாடு :

* ரூ.35 லட்சம் கோடியை தாண்டும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி.

* தனிநபர் வருமானத்தை ஆண்டுக்கு ₹4 லட்சத்துக்கும் மேலாக உயர்த்துதல்

* ஆண்டுக்கு ₹10 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வேலைவாய்ப்பின்மை விகிதத்தை சரிபாதியாக குறைத்தல்

* கடும் வறுமையில் வாடும் ஒரு கோடி பேரை மீட்டெடுத்து, வறுமைக்கோட்டுக்கு கீழ் ஒருவரும் இல்லாத முதல் மாநிலமாகத் தமிழகத்தை முன்னெடுத்தல்.

மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி

* தமிழ்நாட்டின் நிகர பயிரிடும் பரப்பு இப்போது 60 விழுக்காடாக இருக்கிறது. கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டேர் பயிரிட செய்து இதனை 75 விழுக்காடாக உயர்த்துதல்

* தமிழ்நாட்டில் இப்போது இருபோகநிலங்களாக 10 லட்சம் ஹெக்டேர் உள்ளது. இதனை 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்துதல்

* உணவு, தானியங்கள் மற்றும் தேங்காய், கரும்பு, பருத்தி, சூரியகாந்தி ஆகிய பணப்பயிர்களுக்கான வேளாண் ஆக்கத்திறனில் முதல் மூன்று இடங்களுக்கு தமிழகத்தை இடம் பெற செய்தல்

குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர் :

* தனிநபர் பயன்பாட்டுக்கான தண்ணீர் இருப்பை ஆண்டுக்கு 9 லட்சம் லிட்டரில் இருந்து 10 லட்சம் லிட்டராக உயர்த்துதல்

* நாளொன்றுக்கு வீணாகும் தண்ணீர் அளவினை 50 விழுக்காட்டில் இருந்து 15 விழுக்காடாக குறைத்தல்

* மறுசுழற்சி செய்து பயன்படுத்தப்படும் நீரின் விகிதத்தை 5 விழுக்காட்டில் இருந்து 20 விழுக்காடாக உயர்த்துதல்

* பசுமைப் பரப்பளவை 20.27 விழுக்காட்டில் இருந்து 25 விழுக்காடாக உயர்த்துவதற்கு 7.5 லட்சம் ஹெக்டேர் நிலங்களை கூடுதலாக இணைத்தல்

அனைவருக்கும் உயர்தரக்கல்வி மற்றும் உயர்ந்த மருத்துவம்:

* கல்வி (1.9 சதவீதத்தில் இருந்து 6 சதவீதம்) மற்றும் சுகாதாரத்திற்காக (0.75 சதவீதத்தில் இருந்து 2 சதவீதம்) மாநில ெமாத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து செலவிடப்படும் நிதியளவை மூன்று மடங்கு உயர்த்துதல்

* கற்றல் வெளிப்பாட்டுக்கான அளவீட்டில் முதல் 10 இடங்களுக்குள் தமிழகத்தை இடம் பெறச்செய்தல் (தற்போது 17வது இடம்)

* பள்ளிக் கல்வியில் மாணவர்களின் ஒட்டு மொத்த இடைநிற்றல் விகிதத்தை 16 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காட்டிற்கும் கீழாக குறைத்தல்

* அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் முன்மாதிரிப் பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் அமைத்தல்

* மருத்துவர்கள்-செவிலியர்கள்-துணை மருத்துவர்கள் மற்றும் பிற தொழில்கல்விப் பட்டதாரிகளின் எண்ணிக்கையை இரட்டித்தல்

அனைவருக்கும் அனைத்துமான தமிழகம் :

* குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதம்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்குதல்

* பட்டியலினத்தவர்-பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி உதவித் தொகையை இருமடங்கு உயர்த்தி வழங்குதல்

* மனித கழிவுகளை மனிதரே அகற்றும் இழிவை முற்றிலுமாக ஒழித்தல்

எழில்மிகு மாநகரங்களின் மாநிலம் :

* கூடுதலாக 36 லட்சம் வீடுகளுக்குக் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்குவதன் மூலம் குடிநீர் இணைப்பு பெற்ற நகர்ப்புற வீடுகளின் அளவை 35 விழுக்காட்டில் இருந்து 75 விழுக்காடாக உயர்த்துதல்

* அனைத்து நகர்ப்புறப் பகுதிகளிலும் திடக்கழிவு மேலாண்மை அமைப்பினை செயலுறச் செய்தல்

* புதிதாக 9.75 லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்டித் தருவதன் மூலம் குடிசைவாழ் மக்களின் அளவை 16.6 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காட்டுக்கும் கீழாக குறைத்தல்

* நாட்டின் தலைசிறந்த 50 மாநகரங்களின் பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து 15 மாநகரங்களை இடம் பெறச்செய்தல் (தற்போது 11 உள்ளன)

உயர்தர ஊரகக் கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம்:

* தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளில் இப்போது 57 விழுக்காடு கான்கிரீட் வீடுகள் உள்ளது. 20 லட்சம் கான்கிரீட் வீடுகளை புதிதாக் கட்டித்தந்து இதனை 85 விழுக்காட்டுக்கு உயர்த்துதல்

* கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குதல்

* எந்த வானிலைக்கும் அசைந்து கொடுக்காத சாலை இணைப்புகளையும், வடிகால் அமைப்புகளையும் கட்டமைத்தல்

* எல்லா கிராமங்களிலும் அகன்ற அலைக்கற்றை இணைய வசதி ஏற்படுத்துதல்

*

 குறைந்தபட்சம் 50 விழுக்காடு கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மை அமைப்பினை செயலுறச் செய்தல் இவ்வாறு அறிவிப்புக்களை வெளியிட்டார். குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள், வறுமையில் வாடும் ஒரு கோடி பேரை மீட்டெடுப்பது, கல்வி உதவித் தொகை இரு மடங்காக உயர்த்தி வழங்குவது, கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்குதல் ஆகிய வாக்குறுதிகள் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

Related Stories: