தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஊராட்சி ஒன்றியம் முளையம் பூண்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (55). இவர் குடும்பபாளையம் கிராமம் அருகே ஓடக்காடு என்ற இடத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக தாராபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் விநாயகத்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சம்பவ இடம் சென்ற போலீசார் அங்கு விற்பனைக்காக வைத்திருந்த 11 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். 150 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்தனர்.
பின்னர், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது குறித்து பாலசுப்பிரமணியத்தின் மீது வழக்குப்பதிவு செய்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அவரை தாராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அண்மைக்காலமாக தாராபுரம் பகுதியில் கலப்பட மது டாஸ்மாக் பார்களில் விற்பனை செய்யப்படுவதும் கிராமப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதும் தொடர் சம்பவமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.