சத்தியமங்கலம்-கடம்பூர் மலை பகுதிக்கு அரசு பஸ்சில் ஆபத்தான பயணம்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் மலைப் பகுதிக்குச் செல்லும் அரசு  பஸ்சின் மேற்கூரை மற்றும் பின்பக்க ஏணியில் ஆபத்தான முறையில்  பயணிகள் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் மலைப் பகுதிக்கு அரசு பஸ்கள் மற்றும் ஒரு தனியார் பஸ் இயக்கப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் பஸ் இயக்கப்படுவதால், சில சமயம் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து கடம்பூர் மலைப்பகுதிக்கு செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் மிகவும் அதிகமாக இருப்பது வழக்கம்.  

நேற்று சத்தியமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து கடம்பூர் மலைப் பகுதிக்கு செல்லும் அரசு பஸ்சில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் ஏறியதால், பேருந்தின் உள்ளே நிற்கக்கூட இடம் இல்லாத நிலையில், பயணிகள் பின்பக்க ஏணி வழியாக பேருந்தின் மேற்கூரையில் ஏறி பயணித்தனர். அப்போது, ஒரு வாலிபர் பஸ்சின் பின்பக்க ஏணியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்ததை அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் வீடியோ எடுத்து வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் மலைப் பகுதிக்குச் செல்லும் அரசு பஸ் மேற்கூரை மற்றும் பின்பக்க ஏணியில் பொதுமக்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதால், போக்குவரத்து துறை அதிகாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: