ஊட்டி: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கும் நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் சுற்றுலா பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளும் நிலையில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலாதலம் என்பதால் இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பொதுவாக மார்ச் மாதம் துவங்கியவுடன் சமவெளிப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். இதனை சமாளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவது வழக்கம். குறிப்பாக, வார விடுமுறை நாட்களில் அண்டை மாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக கோடை சீசனின் போது சுற்றுலாப் பயணிகள் வர அனுமதி இல்லாது இருந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை சற்று அதிகமாக காணப்பட்டது. கோடை வெயில் துவங்கியுள்ள நிலையில் இம்மாதம் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.