தியாகராஜசுவாமி கோயிலில் 25ம் தேதி ஆழித்தேரோட்டம்: பந்தல் அமைக்கும் பணி மும்முரம்

திருவாரூர்: திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயில் தியாகராஜசுவாமி கோயில். இக்கோயில் சைவசமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும் , சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் கோயில் 5 வேலி, குளம் 5 வேலி, ஓடை 5 வேலி என நிலப்பரப்பினை கொண்ட இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும்,உற்சவராக தியாகராஜரும் இருந்து வருகின்றனர். இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழாவானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும் அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைப்பெறுவது வழக்கம். இந்நிலையில் கொரோனோ காரணமாக கடந்தாண்டு நடைபெற வேண்டிய தேரோட்டம் மற்றும் தெப்ப திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் தற்போது கொரோனோவின் தாக்கம் குறைந்துள்ளதால் நடப்பாண்டில் இந்த ஆழித்தேரோட்ட விழாவினை நடத்துவதற்கு அறநிலையதுறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த ஜனவரி மாதம் 28ம்தேதி பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது. விழா துவக்கத்திற்காக மஹாதுவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றும் நிகழ்ச்சியானது கடந்த 2ம்தேதி நடைபெற்றது. இந்நிலையில் குறைந்தநாட்களே இருப்பதால் ஆழித்தேர் கட்டுமான பணி மற்றும் ஆழித்தேரில் விட்டவாசல் வழியாக தியாகராஜர் எழுந்தருளுவதற்கு பந்தல் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 28 ஆண்டுகளுக்கு பின்னர் ஆயில்ய நட்சத்திரத்தில் நடைபெறும் தேரோட்டம். திருவாரூர் ஆழித்தேர் என்பது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேரோகும். ஆயிரம்ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைபெற்று வந்த இந்த ஆழித்தேரோட்டம் கடந்த 1927ம் ஆண்டு தேரோட்டத்தின் போது ஏற்ப்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக தேர் முற்றிலுமாக எரிந்தது. பின்னர் 1930ல் புதிய தேர் உருவாக்கப்பட்டு 1948 வரையில் நடைபெற்ற நிலையில் பின்னர் பல்வேறு காரணங்களால் இந்த தேரோட்டம் என்பது முற்றிலுமாக தடைப்பட்டது. அதன்பின்னர் வடபாதிமங்கலம் தியாகராஜமுதலியார் பெரும் முயற்சி காரணமாக 1970ல் முதல்வர் பொறுப்பேற்ற மறைந்த கருணாநிதி ஆட்சி காலத்தில் 22 ஆண்டு காலமாக ஓடாத தேர் அவர் எடுத்த நடவடிக்கையால் தேரோட்டம் நடைபெற்றது .

பின்னர் தொடர்ந்து இந்த தேரோட்டமானது நடைபெற்றாலும் தியாகராஜருக்கு உகந்த நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் தான் தேரோட்டம் நடத்த வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன்படி கடந்த 1990, 91 மற்றும் 1993ம் ஆண்டில் இதுபோன்று ஆயில்ய நட்சத்திரத்தில் தேரோட்டம் நடைபெற்ற நிலையில் 28 ஆண்டுகளுக்கு பின்னர் பக்தர்களின் கோரிக்கை நிறைவேறும் வகையில் வரும் 25ம் தேதி ஆயில்ய நட்சத்திரத்தன்று காலை 7.30 மணியளவில் இந்த ஆழித்தேரோட்டத்தை நடத்துவதற்கு அறநிலைய துறை முடிவு செய்துள்ளது குறிப்பிடதக்கது.

Related Stories: