கன்னியாகுமரி எம்பி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டி

புதுடெல்லி: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜ வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கட்சிகள் இடையே கூட்டணி, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜ.வுக்கு 20 சட்டப்பேரவை தொகுதிகளும், இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொகுதி உடன்பாடு நேற்று முன்தினம் கைெயழுத்தானது.

 இந்நிலையில், தொகுதி பங்கீடு முடிந்த மறுநாளே, கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான வேட்பாளரை பாஜ மேலிடம் நேற்று அறிவித்தது. இது தொடர்பாக பாஜ தலைமை இந்தியில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜ வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார்,’ என கூறப்பட்டுள்ளது. கடந்த முறை இத்தொகுதி எம்பி.யாகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரிடம் படுதோல்வியை சந்தித்தார்.

சில மாதங்களுக்கு முன்பாக, கொரோனா வைரஸ் தாக்கியதால் வசந்த குமார் இறந்தார். இதனால், இத்தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இத்தொகுதியில் ஏப்ரல் 6ம் தேதி நடக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, காங்கிரஸ் சார்பாக மறைந்த வசந்த குமாரின் மகன் விஜய் வசந்தும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என கார்த்தி சிதம்பரமும் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: