தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் ரத்தாகுமா?

* உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

* நாளை மறுதினம் விசாரணை

புதுடெல்லி: தமிழகம் உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தொடரப்பட்டுள்ள புதிய வழக்கை உச்ச நீதிமன்றம் வரும் 9ம் தேதி விசாரணை நடத்துவதாக அறிவித்துள்ளது. தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. வரும் 27ம் தேதி முதல் ஏப்ரல் 29ம் தேதி வரை இத்தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய வழக்கை தொடர்ந்துள்ளார். அதில், ‘தமிழகம், கேரளா, புதுவை, அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் நடத்தப்பட இருக்கும் சட்டப்பேரவை தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும், சட்டப்பேரவை பதவிக்காலம் முழுமையாக நிறைவடைந்த பின்னர் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்,’ என்று கூறியுள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், வழக்கை வரும் 9ம் தேதிக்கு பட்டியலிட்டு உள்ளது. தேர்தலை சந்திக்க இம்மாநில கட்சிகள் எல்லாம் தீவிரமான ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் பிரசாரம்செய்யக் கூடாது

வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தனது மனுவில் மேலும், ‘நாட்டின் பிரதமர் என்பவர், மக்கள் அனைவருக்கும் பொதுவானவர். எனவே, தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களிலும் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து கண்டிப்பாக அவர் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது. அவர் பிரசாரம் செய்வதற்கு  தடை விதிக்க வேண்டும்,’ என்றும் கோரியுள்ளார்.

Related Stories: