மத்திய அரசு உத்தரவு காரின் முன் இருக்கை 2-க்கும் ஏப்.1 முதல் ஏர்பேக் கட்டாயம்: பழைய கார்களுக்கு ஆக.31 வரை கெடு

புதுடெல்லி, மார்ச் 7: அடுத்த மாதம் 1ம் தேதியில் இருந்து புதிய கார்கள் அனைத்திலும், முன் பக்கத்தின் இரண்டு இருக்கைகளுக்கும் ஏர்பேக் அமைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. விபத்துகளின்போது கார்களின் முன் இருக்கையில் பயணம் செய்பவர்களுக்குதான், அதிகளவில் உயிர்ச்சேதம் ஏற்படுகிறது. இதை தடுப்பதற்காக கடந்த 2019ம் ஆண்டு, ஜூலையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், காரின் டிரைவர் இருக்கைக்கு ஏர்பேக் வசதி செய்யப்படுவது கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி, தற்போது சிறிய ரக கார்களிலும் கூட, டிரைவர் இருக்கைக்கு மட்டும் ஏர்பேக் வசதி அளிக்கப்படுகிறது.

முன் இருக்கையில் அமரும் பயணிக்கு இந்த வசதி இருப்பது இல்லை. இதனால், விபத்தில் அவர்களுக்கும் பெரியளவில் காயங்களோ அல்லது உயிர் இழப்போ ஏற்படுகிறது. இதை தடுப்பதற்காக,இந்த  அமைச்சகம் மீண்டும் புதிய அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, ஏப்ரல் 1ம் தேதி முதல் தயாரிக்கப்படும் அனைத்து வகையான கார்களிலும் டிரைவர் இருக்கை, பயணி இருக்கை ஆகிய இரண்டுக்கும் ஏர்பேக் பாதுகாப்பு வசதி செய்யப்படுவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஏற்கனவே விற்கப்பட்ட கார்களுக்கும் இந்த வசதியை செய்வதற்கான அவகாசம், ஆகஸ்ட் 31 வரை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சிறிய ரக கார்களின் விலைகள் ₹5 ஆயிரம் முதல் ₹8 ஆயிரம் வரை உயரக்கூடும் என தெரிகிறது.

Related Stories: