பட்டுக்கோட்டை:தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு மீனவர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு மீனவர் பேரவை அவசர ஆலோசனை கூட்டம் தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் தாஜூதீன் தலைமை வகித்தார். இதில், 18 மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய, மாநில அரசுகளுக்கு உணர்த்தும் வகையில் வரும் 19ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள 6,000 விசைப்படகுகள், 48,000 நாட்டுப் படகுகளிலும் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்துவது. டீசல்மீது விதிக்கப்படும் அனைத்து வரிகளையும் நீக்கம் செய்து, உற்பத்தி விலைக்கு டீசல் வழங்க வேண்டும் என்பது உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானங்களை ஏற்று உத்தரவாதம் அளித்து செயல்படுத்தும் கட்சிகளுக்கு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.