அடுத்த தேர்தலில் பாஜ 234 தொகுதியிலும் போட்டி: மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு

ராஜபாளையம்:  அடுத்த தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று மத்திய அமைச்சர் வி.கே.சிங் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் பாஜ செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தொகுதி சட்டமன்ற பொறுப்பாளர் கவுதமி உள்ளிட்ட பாஜவினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் பேசியதாவது: வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி ஆட்சி அமைக்க விரும்புகிறோம்.

கூட்டணியில் 100 தொகுதி பெற்று 10 தொகுதி வெற்றி பெறுவது பெரிதல்ல. 50 தொகுதி பெற்று 25 தொகுதி வெற்றி பெற்றால்தான் நாம் கால் பதிக்க உதவும். அடுத்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு இந்த தேர்தல் ஒரு முக்கிய பரீட்சை. தேர்தலில் பாஜ மற்றும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற உழைக்க வேண்டும். சிலர் ஆட்சிக்கு வந்தால் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்ய மாட்டார்கள்.  பாஜ தொண்டர்கள் வீடு, வீடாக சென்று, நமது கட்சி திட்டங்களையும், தேர்தல் அறிக்கையையும் கொண்டு சென்றால், அது நமக்கு வாக்காக அமையும். தமிழகத்திற்கு பாஜ அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இதை மக்களிடம் எடுத்து சென்று வாக்கு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: