கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பஞ்செட்டி பகுதி சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பொன்னேரி தேர்தல் பறக்கும் படை அலுவலர் செல்வகுமார் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சென்ற அரசு பேருந்தை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் பயணிகள் அமரும் இடத்தில் 2 பைகளில் 25 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, தேனி மாவட்டத்தை சேர்ந்த ராஜா(48) என்பவரை பிடித்து விசாரித்ததில் ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு கஞ்சா கடத்தியதாக தெரிவித்தார். பின்னர் அவரை கவரப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். இதேபோல், எளாவூர் சோதனை சாவடியில் பைக்கில் கஞ்சா கடத்திய சுண்ணாம்பும் தேவராஜ்(23), தமிழ்செல்வம்(22) ஆகியோரை ஆரம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.