மீனம்பாக்கம்: நெதர்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு சரக்கு விமானத்தில் கூரியர் பார்சலில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புடைய போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை பழைய விமான நிலையத்திற்கு ஒரு சரக்கு விமானம் நேற்றிரவு வந்தது. அதில் வந்த சரக்கு பார்சல்கள் மற்றும் கூரியர் தபால் பார்சல்களை சுங்க துறையினர் சோதனையிட்டனர். அப்போது நெதர்லாந்து நாட்டில் இருந்து தமிழகத்தில் கன்னியாகுமரி முகவரிக்கு ஒரு கூரியர் பார்சல் வந்தது. அதில் என்ன இருக்கிறது என்று குறிப்பிடவில்லை.
உடனே சுங்க துறையினர் பார்சலில் இருந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டனர். அந்த எண் உபயோகத்தில் இல்லை என்று வந்தது. விசாரணையில் முகவரியும் போலி என்று தெரியவந்தது. இதையடுத்து அந்த பார்சலை பிரித்து பார்த்தனர். அதற்குள் மிகவும் விலை உயர்ந்த 95 போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. அவைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.