×

5 மாநில சட்டமன்ற தேர்தலை ரத்து செய்க; பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய தடை விதியுங்கள்: உச்சநீதிமன்றத்தில் வழக்கு.!!!

புதுடெல்லி: 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் அசாம் மாநிலத்தில் 3 கட்டமாகவும், மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து 5 மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

இதற்கிடையே, 5 மாநில சட்டமன்ற தேர்தலில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு கட்சி அரசியல் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழகம், அசாம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில், சில மாநிலங்களில் மே மாதமும், சில மாநிலங்களில் ஜூன் மாதமும் மாநில அரசின் பதவி காலம் முடிவடைகிறது. ஆனால், ஒரு மாதத்திற்கு முன்பே இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவதற்கான முடிவை அறிவித்துள்ளது. எனவே, 5 மாநில சட்டப்பேரவை பதவிக்காலம் முடியும் நிலையில் தான் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

எனவே, தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும். பிரதமர் நாட்டு மக்களுக்கு பொதுவானவர் என்பதால் 5 மாநில தேர்தலில் அரசியல் கட்சிக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த வழக்கு வரும் மார்ச் 9-ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது. 5 மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தலுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது தேர்தல் ஆணையம் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags : Modi , 5 மாநில சட்டமன்ற தேர்தலை ரத்து செய்க; பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய தடை விதியுங்கள்: உச்சநீதிமன்றத்தில் வழக்கு.!!!
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...