அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்கப்போம் விழிப்புணர்வு ரங்கோலி கோலம் அமைக்கப்பட்டுள்ளது. இதை கலெக்டர் ரத்னா பார்வையிட்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க 100 சதவீத வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சார்பில் ரங்கோலி கோலம் மூலம் 100 சதவீதம் வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ரத்னா பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், வாக்களிப்பதன் அவசியம் குறித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், 100 சதவீதம் வாக்களிப்போம், வாக்காளர் உரிமை, தேர்தல் நாள், ஓட்டுக்கு வாங்க மாட்டோம் நோட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் லட்சினை (Logo) போன்ற வடிவங்கள் உப்பு மற்றும் கலர்கோலப் பொடிகளால் உருவாக்கப்பட்டிருந்தன. மேலும், 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற கருபொருளை வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலக ரவுன்டானாவை சுற்றி 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற அமைப்பு சிறப்பாக அமைக்கப்பட்டிந்தது. ஓவிய கோலங்களை பார்வையிட்ட கலெக்டர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது என்றும், மேலும் தங்கள் பகுதிகளிலும் 100 சதவீதம் வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வு துறை மூலம் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் 100 சதவீதம் வாக்குப்பதிவு ஏற்படுத்தும் பொருட்டு வாக்காளர்களிடையே வாக்காளர் விழிப்புணர்வு பிரசார ஒலி விளம்பரம் மேற்கொள்ளும் பொருட்டு, பிரசாரம் வாகனத்தினை கலெக்டர் ரத்னா கொடியசைத்து துவக்கி வைத்து, பிரசார வாகனத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாபுதீன், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) தண்டபானி, கோட்ட கலால் அலுவலர் விக்டோரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.