நம்ப வைத்து ஏமாற்றியது எடப்பாடி அரசு..! அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு விலகல்: கருணாஸ் பேட்டி

சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு விலகியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், இளைஞர்களை திரட்டி அதிமுகவுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறோம். முக்குலத்தோர் சமுதாயத்துக்கு அதிமுக செய்த துரோகத்தை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வோம். அதிமுகவை குறிப்பிட்டு இரு சமூகத்துக்கு சொந்தமான அமைப்பாக எடப்பாடி மாறிவிட்டார் என குறிப்பிட்டுள்ளார். 2021 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்டவை உள்ளன.

ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலின் போதும், மக்களவை தேர்தலின் போதும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த முக்குலத்தோர் புலிப்படை கட்சி பெயர் எந்த இடத்திலும் அடிபடவில்லை. முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் திருவாடானை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் கூட்டணி வைக்க அழைப்பார்கள் என்று நம்பியிருந்த நிலையில் ஏமாற்றமே எஞ்சியது. சசிகலாவுக்கு ஆதரவாக பேசியதால் அவருக்கு இடம் வழங்கப்படவில்லையா? என்ற கேள்வி பலரது மனதிலும் இருந்தது.

இந்நிலையில் இதுகுறித்து அறிவித்துள்ள முக்குலத்தூர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ், “அதிமுகவில் சசிகலா என்னை அறிமுகப்படுத்திய காரணத்தினால் புறம்தள்ளி விட்டனர். எடப்பாடி பழனிசாமி எங்களை நம்பவைத்து கழுத்தை அறுத்துவிட்டார். கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம். வன்னியருக்கு இடஒதுக்கீடு தேர்தல் ஆதாயத்திற்காக தந்து மற்ற சமுதாய மக்களிடம் விரோதம் ஏற்படுத்தி கொண்டது அதிமுக. முக்குலத்தோர் கோரிக்கைளை அதிமுக நிறைவேற்றவில்லை” என்றார். மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமணலிங்க தேவர் பெயர் வைக்காமல் பாஜக வாக்குறுதி அளித்து ஏமாற்றிவிட்டது. சசிகலாவுக்கு வாழ்நாள் முழுவதும் நான் ஆதரவாளராக இருப்பேன் என்று கருணாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: