பேரறிஞர் அண்ணா முதல்வராகவும் கலைஞர் உள்ளிட்டோர் அமைச்சராகவும் இன்று தமிழில் பதவியேற்ற நாள்: மு.க.ஸ்டாலின் முகநூலில் பதிவு.!!!

சென்னை: திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியில், இந்தியப் பொதுத் தேர்தல் ஜனநாயக வரலாற்றில், முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்த அரிய சாதனையைப் படைத்த பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராகவும், தலைவர் கலைஞர் உள்ளிட்டோர் அமைச்சர்களாகவும், தமிழில் பதவியேற்பு நிகழ்வினை நடத்தி, உளமார உறுதிமொழி கூறிப் பொறுப்பேற்ற நாள் இன்று.

6-3-1967-ல் நிகழ்ந்த அந்த மகத்தான மாற்றத்திற்கான நிகழ்வின் தொடர்ச்சியாகத்தான், தமிழ்நாடு என்ற நமக்கே உரிமை உடைய பொருத்தப் பெயர் அமைந்தது. மாநில உரிமைகள் மக்களிடையே பேசு பொருளாகி வலிமை பெற்றன. அதனைத் தொடர்ந்து, தலைவர் கலைஞர் தலைமையிலான கழக ஆட்சியில் தமிழகம் படிப்படியாகப் பல படிகள் வளர்ச்சி பெற்றது. தமிழர்கள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முன்னேற்றம் கண்டனர்.

பார் வியந்த அந்த வளர்ச்சியை, கடந்த பத்தாண்டு காலமாகப் பின்னுக்குத்தள்ளி, நிர்வாகச் சீர்கேடுகளாலும், ஊழல் முறைகேடுகளாலும் மோசமான நிலையை உருவாக்கி, மாநில உரிமைகளையும் அடமானம் வைத்துள்ள அ.தி.மு.க. ஆட்சியாளர்களை விரட்டியடித்து, பேரறிஞர் அண்ணா - கலைஞர் வழியில், தி.மு.கழக ஆட்சி அமைந்திட உடன்பிறப்புகள் அனைவரும் இந்நாளில் உறுதியேற்றுச் சூளுரைப்போம்! என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: