வாஷிங்டன்: அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா சமீபத்தில் பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறக்கியது. இதில் ரோவரை வழிநடத்தும் குழுவின் தலைவராக செயல்பட்டவர் இந்திய வம்சாவளியான சுவாதி மோகன். இந்நிலையில், பெர்சவரன்ஸ் வெற்றிக்காக நாசா விஞ்ஞானிகளுடன் அதிபர் ஜோ பைடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று கலந்துரையாடினார். அப்போது சுவாதி மோகனை புகழ்ந்து பேசிய அவர், ‘‘இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் நாட்டை திறம்பட வழிநடத்துகிறார்கள். நீங்கள் (சுவாதி மோகன்), எனது துணை அதிபர் (கமலா ஹாரிஸ்), எனது எழுத்தாளர் (வினய் ரெட்டி) உட்பட அனைவரும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறீர்கள்,” என்று புகழாரம் சூட்டினார். அதிபர் பைடன் பதவியேற்ற 50 நாள்களில் 55 இந்திய வம்சாளிகளை உயர் பதவிகளில் அமர்த்தியிருக்கிறார். அவர்களில் பாதி பேர் பெண்கள் ஆவர்.