வழக்கமாக அதிமுக போட்டியிடக்கூடிய பழநி சட்டமன்ற தொகுதியை இம்முறை பாஜ போட்டியிட விருப்பம் தெரிவித்து கேட்டு வருவதால் லோக்கல் அதிமுகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், தொகுதி தங்களுக்குத்தான் என எண்ணிக்கொண்டு, பாஜ கட்சியினர் பழநியில் அடுத்தடுத்து தேர்தல் தொடர்பான நிகழ்ச்சிகளையும், கட்சியின் முக்கியத் தலைவர்களை அழைத்து வந்து ஆலோசனைக் கூட்டமும் நடத்தி வருகின்றனர். பாஜா கட்சியினரின் இந்த நடவடிக்கைகளால் உள்ளூர் அதிமுகவினர் கவலையடைந்துள்ளனர். கடந்த 25 ஆண்டுகளில் பழநி சட்டமன்ற தொகுதியில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் மாறி மாறி வெற்றி பெற்று வருகின்றனர். இந்நிலையில் மத்திய இணை அமைச்சரான வி.கே.சிங் சமீபத்தில் பழநிக்கு வந்து கட்சி கொடியேற்றியும், பாஜ தேர்தல் அலுவலகத்தை திறந்தும் வைத்தார். பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் கட்சி அலுவலகம் திறந்து களமிறங்கி பாஜ வேலை பார்த்து வருவது, அதிமுகவினரிடையே முகச் சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.