சென்னை: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்து சிபிஎஸ்இ புதிய அட்டவணையை நேற்று வெளியிட்டுள்ளது. புதிய அட்டவணையை சிபிஎஸ்இ இணைய தளத்தில் பார்க்கலாம். கொரோனா காலத்தில் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இயங்கி வருகின்றன. இந்நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மே மாதம் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் அறிவித்து இருந்தார். அதன்படி கடந்த மாதம் மேற்கண்ட வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி மே 4ம் தேதி தேர்வுகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. புதிய அட்டவணைப்படி மே 4ம் தேதி தொடங்கும் தேர்வுகள் ஜூன் 7ம் தேதி வரை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.