×

சிபிஎஸ்இ தேர்வுகளில் மாற்றம்: புதிய அட்டவணை வெளியீடு

சென்னை: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தின் கீழ்  10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்து சிபிஎஸ்இ புதிய அட்டவணையை நேற்று வெளியிட்டுள்ளது. புதிய அட்டவணையை சிபிஎஸ்இ இணைய தளத்தில் பார்க்கலாம். கொரோனா காலத்தில் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இயங்கி வருகின்றன. இந்நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மே மாதம் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் அறிவித்து இருந்தார். அதன்படி கடந்த மாதம் மேற்கண்ட வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி மே 4ம் தேதி தேர்வுகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. புதிய அட்டவணைப்படி மே 4ம் தேதி தொடங்கும் தேர்வுகள் ஜூன் 7ம் தேதி வரை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அட்டவணையில் சில மாற்றங்களை செய்து சில பாடங்களுக்கான தேர்வுகளை வேறு தேதிக்கு ஒத்தி வைத்தும் அறிவித்துள்ளது. கடந்த மாதம் அறிவித்த பழைய தேர்வு அட்டவணையில் 12ம் வகுப்புக்கான இயற்பியல் தேர்வு மே 13ம் தேதி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய அட்டவணையின்படி, மேற்கண்ட இயற்பியல் தேர்வு ஜூன் 8ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல வரலாறு, வங்கித் தேர்வுகளும் வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணையை பொறுத்தவரையில் அறிவியல் மற்றும் கணக்குப் பாடத் தேர்வுகள் வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி அறிவியல் பாடத் தேர்வு மே 21ம் தேதியும், கணக்குப் பாடத் தேர்வு ஜூன் 2ம் தேதிக்கும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. 12ம் வகுப்புக்கான தேர்வு காலை, மதியம் என இரண்டு கட்டமாக நடக்கிறது.



Tags : CBSE , Change in CBSE Exams: New Schedule Release
× RELATED விருகம்பாக்கம் பாலலோக் சிபிஎஸ்இ...