சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று அளித்த பேட்டி: வாகன சோதனையில் நேற்று வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற பணம், பரிசு பொருட்கள் என இதுவரை 15.20 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரொக்கம் மட்டும் 14.13 கோடி. இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள் 8ம் தேதி தமிழகம் வருகின்றனர். இவர்கள் தேர்தல் நேரத்தில் அதிகம் செலவு செய்யும் தொகுதிகள் மற்றும் பண நடமாட்டம் குறித்து கண்டறிவார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலும் அதிகளவில் பணம் எடுப்பவர்கள் மற்றும் அடிக்கடி பணம் எடுப்பவர்கள் அல்லது ஒரே நபருக்கு பல்வேறு நபர்களிடம் இருந்து பணம் வருவதை கண்காணித்து தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர கூகுள் பே, போன் பே மூலமாக வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதை தடுப்பது தொடர்பாக வங்கிகள் மூலமாக கண்காணிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.