கன்னியாகுமரி, புதுச்சேரியில் ரூ..15 கோடி தங்க நகைகள் பறிமுதல்

நாகர்கோவில்: குமரி மாவட்டம் தக்கலை அடுத்துள்ள கல்குறிச்சியில், தாசில்தார் சரளாகுமாரி தலைமையிலான ேதர்தல் பறக்கும்படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக கேரள பதிவெண் கொண்ட ஒரு வாகனம் வந்தது. அதில், பேங்க் ஆன் டூட்டி என்று போர்டு வைக்கப்பட்டிருந்தது. இந்த வாகனத்தை பறக்கும்படையினர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் புதிய மற்றும் பழைய நகைகள் 15 கிலோ 55 கிராம் இருந்தது. இதன் மதிப்பு ₹6 கோடியே 49 லட்சத்து 93 ஆயிரத்து 624 என்று கணக்கிடப்பட்டுள்ளது.

விசாரணையில் பிரபல நகை கடை நிறுவனம் ஒன்றின் தொழிற்கூடம் ஈத்தாமொழி மணிகட்டி பொட்டல் பகுதியில் உள்ளது. அந்த தொழில் கூடத்திற்கு திருவனந்தபுரத்தில் இருந்து நகைகளை கொண்டு செல்வது தெரிய வந்தது. மேலும் அதற்கான ஆவணங்களையும் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அதனால், ஆய்வுக்குபின் திரும்ப கொடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.புதுச்சேரியில் 18 கிலோ: புதுச்சேரி மாநிலம், மாகே பிராந்திய புரவிபுழா பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று மகாராஷ்டிரா பதிவெண் கொண்ட ஒரு வாகனத்தை மடக்கி சோதனை நடத்தினர்.

அப்போது, ரூ.9 கோடி மதிப்பிலான 18 கிலோ தங்க நகைகள் இருந்தது கண்டறியப்பட்டது. பிரபல தனியார் நகைக்கடை நிறுவனத்தில் இருந்து சப்ளைக்காக மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் சென்றது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Related Stories: