×

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழகத்தில் கூடுதல் மையங்கள் அமைக்க கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  தமிழகத்தில் கூடுதல் நீட் தேர்வு மையங்களை  அமைப்பதற்கு, மத்திய, மாநில அரசுகள், தேசிய தேர்வு வாரியம், தேசிய மருத்துவ ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2021-22 கல்வியாண்டில், மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வுக்கு பிப். 23 முதல் மார்ச் 15 வரை விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படும். ஏப்ரல் 18ம் தேதி தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் 255 தேர்வு மையங்களில், தமிழகத்தில் 28, புதுச்சேரியில் ஒரு மையம்  அமைக்கப்பட்டது.  விண்ணப்பங்கள் பெறத்துவங்கிய சில மணி நேரத்தில், தமிழகம்,  புதுச்சேரி தேர்வு மையங்கள் நிரம்பியதாக கூறி, இந்த மையங்கள், ஆன்லைன் விண்ணப்பங்களில் இருந்து நீக்கப்பட்டன.இதை எதிர்த்து, தமிழகத்தில் கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்க கோரி விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த வழக்கறிஞர் வீரபிள்ளை ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

அந்தமனுவில், தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 15ம் தேதி வரை அவகாசம் உள்ள நிலையில், தமிழகத்தில் தேர்வு மையங்கள் நிரம்பி விட்டதாக  அறிவித்துள்ளதால், மாணவர்கள் வெளி மாநில தேர்வு மையங்களையே தேர்வு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.இது அவர்களை தேர்வில் கவனம் செலுத்த முடியாமல் செய்து விடும். அதனால், தமிழகத்தில் கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்க தேசிய தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என இருந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் சத்திகுமார் சுகுமார குருப் அமர்வு, மத்திய, மாநில சுகாதாரத் துறை செயலாளர்களும், தேசிய தேர்வு வாரியமும், தேசிய மருத்துவ ஆணையமும் பதிலளிக்குமாறு  உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

Tags : Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...