திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் 14ம் தேதி முதல் முன்னுரிமை தரிசனம்: தலைமை செயல் அலுவலர் தகவல்

திருமலை: ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அடுத்த மாதம் 14ம் தேதி முதல் ஆர்ஜித சேவை, முன்னுரிமை தரிசனம் தொடங்கப்படும்,’ என்று தலைமை செயல் அலுவலர் ஜவகர் தெரிவித்துள்ளார். திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில்  தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் ஜவகர் நேற்று அளித்த பேட்டி: திருப்பதியில் கொரோனா தொற்றால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ரத்து செய்யப்பட்ட அனைத்து ஆர்ஜித சேவைகள், முதியோர் மற்றும் குழந்தைகளுக்கான முன்னுரிமை தரிசனம் அடுத்த மாதம் 14ம் தேதி  தெலுங்கு வருட பிறப்பான உகாதியன்று  மீண்டும் தொடங்கப்படும்.

ஆர்ஜித சேவையில் பங்கேற்கும் பக்தர்கள், கொரோனா சான்றிதழ் காண்பித்தால் மட்டுமே பங்கேற்க முடியும். ஏழுமலையானை கடந்த மாதம் 14 லட்சத்து 41 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். 6 லட்சத்து 72 ஆயிரம் பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். அவர்கள் ரூ.93.96 கோடியை உண்டியல் காணிக்கையாக செலுத்தினர். 76 லட்சத்து 61 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: