×

மும்பையில் வெடிபொருட்களுடன் அம்பானி வீட்டருகே நின்ற காரின் உரிமையாளர் மர்மச்சாவு

மும்பை: மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிபொருட்களுடன் நிறுத்தப்பட்ட காரின் உரிமையாளர் மர்மமான முறையில் இறந்துள்ளார். தெற்கு மும்பையில் ரிலையன்–்ஸ் நிறுவன உரிமையாளர் முகேஷ் அம்பானி வீடு அருகே ஜெலட்டின் குச்சிகளுடன் மர்ம கார் ஒன்று கடந்த 25ம் தேதி நிறுத்தப்பட்டு இருந்தது. அதில், அம்பானிக்கு மிரட்டல் விடுக்கும் கடிதமும் இருந்தது. பத்திரிகைகளில் வெளியான காரின் புகைப்படத்தை பார்த்ததும், அந்த காரின் உரிமையாளர் மும்பை போலீசிடம் சென்று தகவல் தெரிவித்தார். அவர் பெயர்  ஹிரண் மன்சூக். தானேவில் வாகன உதிரி பாக விற்பனை கடை வைத்துள்ளார். தனது கார் சில நாட்களுக்கு முன் திருட்டு போனதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் இரவு முதல் காணவில்லை என, நேற்று பிற்பகல் போலீசில் குடும்பத்தினர் புகார் அளித்தனர். போலீசார் அவரை தேடி வந்த நிலையில், நேற்று அவருடைய உடல் மும்ப்ரா ரெட்டி பந்தர் சாலையை ஒட்டிய ஓடைக்கரையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அம்பானி வீட்டருகே நிறுத்தப்பட்ட வெடிபொருள் கார் பற்றிய விசாரணையில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டு இருப்பது, இதன் பின்னணியில் பெரிய கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Tags : Ambani ,Mumbai , Marmachavu, owner of a car parked near Ambani's house in Mumbai with explosives
× RELATED முகேஷ் அம்பானி வீட்டு திருமண...