டெல்லி எல்லைகளில் நடத்தப்படும் விவசாயிகள் போராட்டம் இன்று சதம் அடிக்கிறது: இதுவரை 200 பேர் பலி

புதுடெல்லி: டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் 100வது நாளை எட்டுகிறது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர், டெல்லி எல்லைகளில் முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றுடன் இந்த போராட்டம் 100வது நாளை எட்டுகிறது. ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து, போராட்ட களங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால், போராட்ட களத்துக்கு புதிதாக விவசாயிகள் வருவது தடுக்கப்பட்டுள்ளது.

மேலும், திக்ரி, காஜிபூர், சிங்கு எல்லைகளில் விவசாயிகள் தங்களின் டிராக்டர்களையே வீடுகளாக மாற்றி தங்கி, சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்கின்றனர். இதில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த 3 சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்யாத வரையில் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறி வருகின்றனர். டெல்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் உடல்நிலை பாதிப்பு, தற்கொலை, மர்மச்சாவுகள் என இதுவரையில் 200 பேர் வரை இறந்துள்ளனர்.

Related Stories: