சென்ட்ரல் ரயில் நிலையம், அம்பத்தூர், தாம்பரத்தில் ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.5.95 லட்சம் பறிமுதல்

சென்னை: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. அதில் வந்த ஒரு பயணியின் உடமைகளை ரயில்வே போலீசார் சோதனை செய்தபோது, ரூ.1.75 லட்சம் இருந்தது. விசாரணையில் கூடூர் பகுதியை சேர்ந்த சென்னையா (51) என்பதும், அந்த பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாதததும் தெரிந்தது. அதை பறிமுதல் செய்து  துறைமுக தொகுதிக்குட்பட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன், ஆந்திராவில் இருந்து ரயிலில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.4.18 லட்சத்தை ரயில்வே பாலீசார் பறிமுதல் செய்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.

அம்பத்தூர்: அம்பத்தூர் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கேசவன் தலைமையில் போலீசார் கொரட்டூர் கிழக்கு அவென்யூ, அம்மா உணவகம் அருகில் நேற்று  வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வந்த அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு அருள் நகரை சார்ந்த ரங்கநாதன் (36) என்பவரிடம் ரூ.1.20 லட்சம் இருந்தது. அந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் அதை பறிமுதல் செய்து, அம்பத்தூர் தொகுதி தேர்தல் அதிகாரி விஜயகுமாரி மூலமாக அம்பத்தூர் தாசில்தார் பார்வதியிடம் ஒப்படைத்தனர்.  

தாம்பரம்: தாம்பரம் - முடிச்சூர் பிரதான சாலையில், மதனபுரம் மேம்பாலம் அருகே தனி வட்டாட்சியர் பார்த்திபன் தலைமையில் போலீசார் அடங்கிய தேர்தல் பறக்கும் படையினர், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டபோது, முடிச்சூர் நோக்கி சென்ற சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர். அதில், ரூ.3 லட்சம் இருந்தது. காரை ஓட்டி வந்த பீர்க்கன்காரணையை சேர்ந்த ஆனந்திடம் (35), பணத்திற்கு உரிய ஆவணத்தை கேட்டபோது, இல்லை என தெரிவித்துள்ளார். இதனால், பணத்தை பறிமுதல் செய்து, தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் முன்னிலையில் தாம்பரம் தாசில்தார் சரவணனிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: