×

நீண்ட இழுபறிக்கு பின் அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு 20 சீட் ஒதுக்கீடு: சென்னையில் 5 தொகுதி உள்பட கேட்ட தொகுதிகள் கிடைத்தது: அமமுகவுக்கு இடமில்லை

சென்னை: நீண்ட இழுபறிக்கு பின்னர் அதிமுக-பாஜகூட்டணி பேச்சு வார்த்தையில் நேற்று உடன்பாடு எட்டப்பட்டது. பாஜவுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக இரு தரப்பு தலைவர்களும் நள்ளிரவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜ போட்டியிடும் என்றும் உடன்படிக்கையில் கையெழுத்தாகியுள்ளது.  தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதிமுகவில் 60 சீட்டுகள் வேண்டும் என்று பாஜ முதலில் கூறியது. ஆனால் அதிமுக தரப்பில் 15 தொகுதிகள் தருவதாக கூறினர். அப்போதுதான் எதிர்பாராதவிதமாக அமமுகவை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று பாஜ தலைமை விரும்பியது.

கடந்த மக்களவை தேர்தலின் போது சுமார் 52 சட்டப்பேரவை தொகுதிகளில் கணிசமான வாக்குகளை அக்கட்சி பெற்றது. இதனால் அக்கட்சியை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று அதிமுகவுக்கு பாஜ தலைமை வேண்டுகோள் விடுத்தது. இதை ஆரம்பத்திலேயே எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எதிர்க்க தொடங்கினர். பாஜ மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவும் அமமுகவுடன் கூட்டணியை ஏற்படுத்தலாம் என்று கூறினார். ஆனாலும் அதிமுக தலைவர்கள் ஏற்கவில்லை. இதனால் அதிமுக, பாஜ கூட்டணி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில், தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளர்களான மத்திய இணை அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங் ஆகியோர் அதிமுக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாங்கள் விரும்பும் தொகுதிகளை கொடுத்தால் சீட்டுகளை குறைத்துக் கொள்வதாக பாஜ தரப்பில் கூறப்பட்டது. அதன்படி, 20 சீட்டுகளை வழங்க அதிமுக சம்மதித்தது. மேலும், பாஜ கேட்கும் தொகுதிகளை வழங்குவதாகவும் அதிமுக தலைமை கூறியது. இந்த  உடன்படிக்கையின்படியே 20 தொகுதிகளுக்கு பாஜ ஒப்புக் கொண்டது.

சென்னையில் 5 தொகுதிகள் உள்பட பாஜ கேட்ட தொகுதிகள் அனைத்தையும் அதிமுக வழங்கியுள்ளது. அதன்படி, சென்னையில் மயிலாப்பூர், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, வேளச்சேரி, கொளத்தூர் ஆகிய 5 தொகுதிகள் வழங்க அதிமுக தலைமை ஒப்புக்கொண்டது. அதில், மயிலாப்பூரில் மேலிட சிபாரிசில் கே.டி.ராகவன் நிறுத்தப்படுகிறார். துறைமுகம் தொகுதி பாஜ இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வத்துக்கும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி நடிகை குஷ்பு, வேளச்சேரி தொகுதி மாநில செயலாளர் டால்பின் தர் ஆகியோருக்கும் வழங்கப்படுகிறது. கொளத்தூர் தொகுதியை பாஜ வேண்டாம் என்று கூறியது. ஆனால் தோற்கும் தொகுதியை நாங்கள் மட்டுமே வைத்திருக்க முடியாது என்று கூறி, கொளத்தூரை பாஜவுக்கு தள்ளிவிட்டுள்ளது.மேலும், பெரும்புதூர் அல்லது காஞ்சிபுரம் வேண்டும் என்றும் கேட்டனர். அதில் காஞ்சிபுரத்தை அதிமுக வழங்கியுள்ளது. அதில் கேசவன் என்பவர் நிறுத்தப்படுகிறார்.

திருத்தணியில் சக்கரவர்த்தியும், பழனியில் முன்னாள் எம்பி கார்வேந்தன், சிதம்பரத்தில் ஏழுமலை, மேற்கு மண்டலத்தில் கிணத்துக்கடவு தொகுதியில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, கோவை தெற்கில் வானதி சீனிவாசன் மற்றும் ஒரு தொகுதி சி.பி.ராதாகிருஷ்ணனின் பரிந்துரையில் ஒருவருக்கு வழங்கப்படுகிறது. பாஜ தலைவர் எல்.முருகன் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் போட்டியிட விரும்புவதால் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, அக்கட்சியின் துணை தலைவர் வி.பி.துரைசாமியின் மகன் டாக்டர் பிரேமுக்கு ஆத்தூர் ஒதுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் கருப்பு முருகானந்தமும், திருவண்ணாமலையில் தணிகைவேல், வேலூரில் கார்த்தியாயினி, ஓசூரில் நரேந்திரன் நிற்கின்றனர். இதற்காக, இந்த தொகுதிகளை பாஜ கேட்டு பெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் தொகுதியை பாஜ கேட்டது. பின்னர் திடீரென தங்களுக்கு தூத்துக்குடி தொகுதியை ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது. அங்கு மாவட்ட பொதுச் செயலாளர் சிவமுருக ஆதித்தன் போட்டியிடுகிறார். நெல்லையை நயினார் நாகேந்திரன், ராஜபாளையத்தை நடிகை கவுதமி ஆகியோருக்காக வாங்கியுள்ளனர்.

நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா ஒரு தொகுதியை கேட்டு வாங்கியுள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை ராஜாவுக்காக கேட்டு வாங்கியுள்ளனர். இதை தவிர கன்னியாகுமரியில் 2 தொகுதிகள் வாங்கியுள்ளனர். ஈரோடு, பவானி, சூலூர், கேவிகுப்பம், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை கிழக்கு, மதுரை வடக்கு ஆகிய இடங்களை கேட்டு பெற்றுள்ளனர். அதில் தென் மாவட்டங்களில் மட்டும் பாஜ 13 தொகுதிகளை கேட்டு வாங்கியுள்ளது.
தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள சமுதாயமான தேவேந்திரகுல வேளாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை 7 உட்பிரிவுகளை இணைத்து ஒன்றாக அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். அதேபோல பட்டியல் இனப்பட்டியலில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதில் 7 உட் பிரிவுகளை ஒன்றாக இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாஜ ஏற்றுக் கொண்டது. இதற்கான சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது. ஆனால், இன்னும் நிறைவேற்றவில்லை.

சென்னை வந்த பிரதமர் மோடி நான் நரேந்திரன், நீங்கள் தேவேந்திரர் என்று கூறினார். இதனால் அந்த சமுதாய இளைஞர்களை பாஜ பக்கம் திருப்பியது. ஆனால் பாஜ வாங்கிய 20 தொகுதிகளில் ஒரு தொகுதிகள் கூட தேவேந்திரர்களுக்கு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இது அந்த சமுதாயத்தினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தேவேந்திரர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் 13 தொகுதிகளை பாஜ கேட்டு வாங்கியுள்ளது. இந்நிலையில், பாஜ கூட்டணியில் அமமுகவை சேர்க்க வேண்டும் என்ற பிடிவாதத்தை பாஜ முழுமையாக கைவிட்டு விட்டது. ஆனால், அமமுகவை சேர்க்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள் விடுத்தார். இதை எடப்பாடி ஏற்கவில்லை. கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்பத்தில் மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டியை அதிமுக தலைவர்கள் எதிர்பார்த்த மரியாதையுடன் நடத்தவில்லை என்று கூறப்படுகிறது.  நேற்று நல்ல நாள் என்பதால் அதற்குள் கூட்டணியை பேசி முடிக்க வேண்டும் என்று அதிமுக தலைவர்கள் முடிவு செய்திருந்தனர்.

ஆனால் அதற்கு பாஜ தலைவர்கள் உடன்படவில்லை. இதனால்தான் நல்ல நாள் என்பதால் நேற்று 6 பேர் கொண்ட பட்டியலை மட்டும் அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. தற்போது ஒருவழியாக பாஜவுடன் உடன்பாடு எட்டப்பட்டு முடிவாகியுள்ளது. இதுகுறித்து நள்ளிரவில் அதிமுக வெளியிட்ட அறிக்கையில், ஏப்ரல் 6ம் தேதியன்று  நடை பெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி யில் பாஜவுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதேபோல் அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜவின் வேட் பாளருக்கு அதிமுக தனது முழு ஆதரவை அளிக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : BJP ,AIADMK , For long drag Then BJP gets 26 seats in AIADMK?
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...