திருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கிய டாலர் கடத்தல் வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயன், சபாநாயகருக்கு நேரடி தொடர்பு இருந்ததாக சுங்கத்துறை தாக்கல் செய்த பிராமண பத்திரத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு கேரளாவையே உலுக்கிய தங்கக்கடத்தல் வழக்கு மற்றும் அதனுடன் தொடர்புடைய டாலர் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் தற்போது சிறையில் உள்ளார். அவரிடம் பெறப்பட்ட ரகசிய வாக்குமூலத்தை பிராமண பத்திரமாக கேரள உயர்நீதிமன்றத்தில் சுங்கத்துறை தாக்கல் செய்துள்ளது. அதில் டாலர் கடத்தலில் பினராயி விஜயன், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு நேரடி தொடர்பு இருந்தது என ஸ்வப்னா கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஐக்கிய அரபு அமீரக முன்னாள் துணை தூதரின் உதவியோடு இந்த கடத்தல் அரங்கேறியதாக பிராமணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. துணை தூதருக்கு தாம் மொழிபெயர்ப்பாளராக இருந்ததால் இந்த விஷயங்கள் அனைத்தும் தமக்கு தெரியும் என்று ஸ்வப்னா கூறியதாக சுங்கத்துறையின் பிராமணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூவருக்கும் இடையே சட்டவிரோத பணபரிமாற்றமும் நடந்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. டாலர் கடத்தல் வழக்கில் மூன்று அமைச்சர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டிருப்பது கேரளா அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.