உடுமலை : நீர்மட்டம் குறைந்துவருவதால், திருமூர்த்தி அணை மேய்ச்சல் நிலமாகியது. அணையின் கரையில் வளர்ந்துள்ள புற்களை கால்நடைகள் மேய்ந்து வருகின்றன.உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை 60 அடி உயரம் கொண்டது. பரம்பிக்குளம் அணையில் இருந்து சர்க்கார்பதி மின்நிலையம் வழியாக கான்டூர் கால்வாய் மூலம் அணைக்கு தண்ணீர் கொண்டு வந்து சேமிக்கப்படுகிறது.
பாலாறு வழியாகவும் அணைக்கு தண்ணீர் வருகிறது.இந்த அணை மூலம் பிஏபி திட்டத்தில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன. நான்கு மண்டலங்களாக பிரித்து பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. தற்போது 3-வது மண்டல பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அணையின் நீர்மட்டம் குறைய துவங்கி உள்ளது. நேற்று நீர்மட்டம் 47.19 அடியாக இருந்தது. அணைக்கு கான்டூர் கால்வாய் மூலம் 839 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. 41 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.நீர்மட்டம் குறைந்துவருவதால், அணையில் பல இடங்களில் மண்மேடாக காட்சி அளிக்கிறது. அதில் வளர்ந்துள்ள புற்களை ஆடு, மாடுகள் மேய்ந்து வருகின்றன. கால்நடை வளர்ப்போர் தங்கள் ஆடுகளை அணையின் கரையில் கொண்டு வந்து மேயவிடுகின்றனர்.