புதுவை அருகே பரபரப்பு திருமணமான 10 நாளில் வடமாநில வாலிபர் மர்ம சாவு-உடலை புதைக்க மக்கள் எதிர்ப்பு - போலீசார் விசாரணை

காலாப்பட்டு :  புதுவை அருகே திருமணமான 10 நாளில் வடமாநில வாலிபர் மர்மமான முறையில் இறந்தார். வானூர் அருகே உள்ள பெரம்பை பங்களாமேடு பகுதியில் வடநாட்டை சேர்ந்த சுமார் 50 பேர் குடும்பத்துடன் தங்கி பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பேப்பர் சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த மன்சூர் மகன் இலியாஸ் (30) என்பவர், தனது மனைவி மீரா (26) வுடன் இங்கு தங்கியிருந்து குப்பை பொறுக்கி விற்று வந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி பத்து நாட்களே ஆகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இலியாஸ் அப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி அறிந்த உறவினர்கள் அவரது உடலை இறுதி சடங்கு ெசய்வதற்காக அங்குள்ள சுடுகாட்டுக்கு எடுத்து சென்றபோது அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தினர். இலியாசின் சாவில் மர்மம் உள்ளது. உடலை இங்கு புதைக்கக்கூடாது என தெரிவித்தனர். தொடர்ந்து இலியாஸ் உடலை வில்லியனூர் அருகே உள்ள சுல்தான்பேட்டை சுடுகாட்டுக்கு எடுத்து சென்றனர். அங்குள்ள மக்களும் இதற்கு ஆட்சேபம் தெரிவித்து, இறந்தவர் உடலில் காயம் இருப்பதாக தெரிவித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இலியாஸ் உடலை கைப்பற்றி கனகசெட்டிக்குளம் தனியார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே இலியாஸ் இறப்புக்கான காரணம் குறித்து அவரது உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: