சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மார்ச் 7ம் தேதி பெண்களுடன் இணைந்து நடைபயணம்..!!

கொல்கத்தா: சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மேற்கு வங்க மாநில முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி நாளை மறுநாள் பெண்களுடன் இணைந்து நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் விலை விரைவில் 100 ரூபாயை தாண்டும் என்று கூறப்படுகிறது.  தற்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 65 டாலருக்கு விற்பனை செய்யப்படும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. ஏற்கனவே மும்பை உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டர் 100 ரூபாயை நெருங்கிவிட்டது. தொடர்ந்து, இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வு காரணமாக எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.

விலைவாசி உயர்வை கண்டித்து ராகுல்காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மேற்கு வங்க மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவியுமான செல்வி மம்தா பானர்ஜி, சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக நாளை மறுநாள் நடைபயணம் மேற்கொள்கிறார். சிலிகுரியில் நடைபெறும் இந்த நடைப்பயணத்தில் பெண்கள் மட்டுமே கலந்துக் கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக  அரசால் சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு இந்த பேரணியில் பெண்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: