திருச்சியில் மார்ச் 7ம்தேதி திமுக பொதுக் கூட்டம் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்: மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் முடிவு

சென்னை: திருச்சியில் மார்ச் 7ம்தேதி திமுக பொதுக் கூட்டம் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வெளியிட்ட பத்திரிகைச் செய்தி; இன்று காலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்களின் கூட்டம் காணொலிக் காட்சி வழியாக நடைபெற்றது. அதுபோது, நாளை மறுநாள்  திருச்சியில் நடைபெறவுள்ள மாபெரும் பொதுக்கூட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பொதுக்கூட்டம் காலை 7 மணிக்குத் துவங்கி மாலை 8 மணி வரை நடைபெறும் என்றும், அந்தக் கூட்டத்தில் மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் - பகுதி - வட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தின் மூலம் கழகத் தலைவர் அவர்கள் அழைப்பு விடுத்தார். அதோடு, நடைபெறவுள்ள 2021 சட்டமன்றத் தேர்தலில், தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்டுள்ள 80 வயது மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோர் - நோயுற்றவர்களாகச் சந்தேகிக்கப்படுபவர்கள் ஆகியோருக்கான தபால் வாக்குகள் பதிவு செய்யும் நடைமுறைகளை உன்னிப்பாகக் கவனித்து, அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில், கழகப் பொதுச் செயலாளர் திரு. துரைமுருகன், கழகப் பொருளாளர் திரு. டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் திரு. கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் திரு. இ. பெரியசாமி, முனைவர் க.பொன்முடி, திருமதி. சுப்புலட்சுமி ஜெகதீசன், திரு. ஆ. இராசா எம்.பி., திரு. அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி., அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி எம்.பி., மாவட்டக் கழகச் செயலாளர்கள் – பொறுப்பாளர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் திரு. பி.வில்சன் மற்றும் திரு. என்.ஆர். இளங்கோ ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories: