கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு ஏப். வரை நீட்டிக்க திட்டம்!: ஒபேக் நாடுகள் முடிவால் பெட்ரோல், டீசல் விலை ரூ.100ஐ தாண்டும் அபாயம்..!!

டெல்லி: ஏப்ரல் மாதம் வரை குறைந்த அளவே கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய ஒபேக் நாடுகள் முடிவு செய்திருப்பதால் பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் விலை விரைவில் 100 ரூபாயை தாண்டும் என்று கூறப்படுகிறது. சவூதி அரேபியா தலைமையிலான ஒபேக் பிளஸ் நாடுகளின் இணையவழி கூட்டம் நடைபெற்றது. அதில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பொருளாதார மந்தநிலையை கருத்தில் கொண்டு ஏப்ரல் மாதத்திலும் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க போவதில்லை என்று முடிவெடுத்தன.

இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பில்லை என்று தெரிகிறது. தற்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 65 டாலருக்கு விற்பனை செய்யப்படும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. ஏற்கனவே மும்பை உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டர் 100 ரூபாயை நெருங்கிவிட்டது. விரைவில் அனைத்து மாநிலங்களிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், கொரோனா பரவலுக்கு முந்தைய நிலைக்கு கச்சா எண்ணெய் தேவை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கேற்ப கச்சா எண்ணெய் உற்பத்தியை ஒபேக் பிளஸ் நாடுகள் அதிகரிக்கவில்லை என்று கூறியுள்ள அவர், 2021ம் ஆண்டு தொடக்கத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி இயல்பு நிலைக்கு திரும்பும் என்று ஒபேக் பிளஸ் கூட்டமைப்பு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: