பெங்களூரு: துபாயில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.17.14 லட்சம் மதிப்பிலான 360 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். பெங்களூரு விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதை தடுக்கும் பணியில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி சமீபத்தில் துபாயில் இருந்து பெங்களூருவிற்கு வந்த விமானத்தில் பயணித்த வாலிபர் ஒருவரின் டிராலி பேக் மீது சந்தேகம் எழுந்தது. அவரின் டிராலி பேக்கை வாங்கி சோதனை செய்தபோது, அதில் ரேடியம் முலாம் பூசப்பட்டிருந்தது. சந்தேகம் அடைந்த அதிகாரிகள் டிராலியில் இருந்த கம்பிகள் மற்றும் போல்டுகளை, இராசாயண திரவம் வைத்து ஆய்வு செய்தனர்.