குஜராத்தில் நடைபெறும் ராணுவ தளபதிகள் மாநாட்டில் முதல்முறை வீரர்களும் பங்கேற்பு: நாளை பிரதமர் மோடி உரை

புதுடெல்லி: முப்படை தளபதிகள், ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொள்ளும் மாநாட்டில் பிரதமர் மோடி நாளை உரையாற்றுகிறார். முப்படை தளபதிகள், உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் கலந்து கொள்ளும் மாநாடு நேற்று குஜராத்தில் தொடங்கியது. இதில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவனே, விமானப்படை தளபதி பதவுரியா, கடற்படை தளபதி கரம்பீர் சிங் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதில் முதல் முறையாக ராணுவ வீரர்கள், இளம் ராணுவ அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.

இதனால், இந்த மாநாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது. நிறைவு நாளான சனிக்கிழமை, இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். ராணுவ தளபதிகள், உயர்மட்ட ராணுவ அதிகாரிகளுடன் மோடி உரையாற்ற உள்ளார் என்பதாலும், இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட படேலின் சிலை அமைந்துள்ள இடத்தில் மாநாடு நடத்தப்படுவதாலும் சர்வதேச அளவில் இந்த மாநாடு கவனம் பெற்றுள்ளது.

Related Stories: