திருமணத்திற்கு புடவை வாங்குவதுபோல் துணிக்கடையில் நூதன கைவரிசை: பெண் கைது; கார் பறிமுதல்

அண்ணாநகர்: அம்பத்தூர் கள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்த எடிசன், திருமங்கலம் பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது கடைக்கு காரில் வந்த 4 பெண்கள், திருமணத்திற்காக விலை உயர்ந்த புடவைகள் வேண்டுமென கூறினர்.  அவர்களது நடத்தையில் சந்தேகமடைந்த எடிசன், கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அவர்களில் 3 பெண்கள் புடவைகளை திருடுவது  பதிவாகி இருந்தது. இதுகுறித்து திருமங்கலம் போலீசாருக்கு எடிசன் தகவல் தெரிவித்தார். இதனால், சுதாரித்துக்ெகாண்ட 3 பெண்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

ஒரு பெண் மட்டும் பிடிபட்டார். அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜயா (50) என்பதும், இவர் மீது ஏற்கனவே ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள கடையில் புடவை திருடிய வழக்கு நிலுவையில் இருப்பதும்  தெரியவந்தது. அவரை புழல் சிறையில் அடைத்தனர். தப்பிய 3 பெண்களை வலைவீசி தேடி வருகின்றனர். இவர்கள்  வந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: