தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் பயிர் கடன் தள்ளுபடி சான்றிதழில் ஜெயலலிதா, எடப்பாடி படம் இருந்ததால் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கான கூட்டுறவு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதில், கீழத்திருப்பூந்துருத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 100விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி ஆனதற்கான சான்றிதழ்களை சங்கத்தின் தலைவர் வழங்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்து இருந்தார். இதையடுத்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட துணை செயலாளர் திருப்பூந்துருத்தி சுகுமாரன் தலைமையிலான விவசாயிகள், கூட்டுறவு சங்கத்திற்கு நேற்று வந்தனர்.
அப்போது, விவசாய பயிர் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழில் முதல்வர் எடப்பாடி மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படங்கள் இடம் பெற்றிருந்ததை பார்த்து விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் கூட்டுறவு சங்க தலைவர் சான்றிதழ் வழங்கவும் ஆட்சேபம் தெரிவித்தனர். விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் சங்க தலைவர், செயலாளர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். இதையடுத்து வேறுவழியில்லாமல் முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வர் படங்களை அலுவலர்களே மறைத்தனர். அதன்பின்னரே விவசாயிகள் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.