×

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் பதவிகளுக்கு ஜூன் 27ம் தேதி முதல்நிலை தேர்வு

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் பதவிகளுக்கு வருகிற ஜூன் 27ம் தேதி முதல்நிலை தேர்வு நடக்கிறது. இத்தேர்வுக்கு வருகிற 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐ.எப்எஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான ேதர்வுகளை நடத்துகிறது. இந்த ஆண்டு(2021) சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 712 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை யு.பி.எஸ்.சி. நேற்று தனது இணையதளத்தில் வெளியிட்டது. முதல்நிலை தேர்வு வருகிற ஜூன் 27ம் தேதி நடக்கிறது. இத்தேர்வுக்கு www.upsconline.nic.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வருகிற 24ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதாவது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இது குறித்து சங்கர் ஐ.ஏ.எஸ். அகடாமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: சிவில் சர்வீஸ் தேர்வு முதல்நிலை, முதன்மை தேர்வு, நேர்காணல் என்று 3 கட்டமாக நடைபெறும். முதல்நிலை தேர்வு வருகிற ஜூன் மாதம் 27ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வு தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் மட்டும் நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரை பொது அறிவு தேர்வும், மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறனறிவு தேர்வும் நடக்கிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்த கட்டமாக மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். தமிழகத்தை பொறுத்தவரை மெயின் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தக்கட்டமாக நேர்முக ேதர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

அதில் தேர்ச்சி பெறுவோருக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும். பொதுவாக யு.பி.எஸ்.சி. ஒவ்வொரு  ஆண்டும் 24 வகையான தேர்வுகளை நடத்துவது வழக்கம். ஆனால், இந்தாண்டு 19 வகையான தேர்வுகளுக்கு மட்டுமே நடத்தப்படுகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் 900க்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்படும். இது தற்போது 712 ஆக குறைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : IAS, IPS, IRS post, June 27th
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...