வாக்குப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: வாக்குப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன் வாக்காளர்கள் எளிதில் வாக்களிக்க வசதியாக வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நடைபெற இருக்கிற சட்டமன்ற பேரவைக்கான பொதுத்தேர்தலில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டுக்கு பதில், `வாக்காளர் தகவல் சீட்டு’ அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. வாக்காளர் தகவல் சீட்டில் வாக்குச்சாவடி மையம், வாக்குப்பதிவு நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும். இந்த வாக்காளர் தகவல் சீட்டில் வாக்காளர்களின் புகைப்படம் இடம்பெறாது. வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு ஐந்து நாட்களுக்கு முன்னரே அனைத்து வாக்காளர் தகவல் சீட்டினையும் விநியோகிக்க அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: