சென்னை: 2021 சட்டமன்றத் தேர்தலில் புகைப்பட வாக்காளர் சீட்டுக்கு பதில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. தொடர்ந்து, மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதனால், ஒருபுறம் கூட்டணி; மறுபுறம் தொகுதி பங்கீடு என அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளையில் தேர்தல் நடத்தும் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்ட அறிக்கையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் தகவல் சீட்டில், புகைப்பட வாக்காளர் சீட்டுக்கு பதில் வாக்குச்சாவடி, வாக்குப்பதிவு நாள் மற்றும் நேரம், உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் தகவல் சீட்டில் வாக்குச் சாவடி மையம், வாக்குப்பதிவு நாள், நேரம் இடம் பெற்றிருக்கும். மேலும் இந்த தேர்தலில் வழங்கப்படும் வாக்காளர் தகவல் சீட்டில் வாக்காளர்களின் புகைப்படம் இடம்பெறாது என் அவர் தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு, தகவல் சீட்டுகளை வாக்காளர்களுக்கு வழங்க வேண்டும், என மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.