சென்னை: அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நடத்திய நேர்காணல் நிறைவடைந்தது. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 6ம்தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 12ம்தேதி நடைபெறுகிறது. எனவே, தமிழகம், கேரளா, புதுச்சேரியில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து கடந்த 27ம்தேதி முதல் மார்ச் 5ம்தேதி வரை விருப்பமனு வாங்கப்பட்டது.
தமிழகத்தில் போட்டியிட விரும்புகிறவர்கள் ரூ.15000ம், புதுச்சேரியில் ரூ.5000, கேரளாவில் ரூ.2000ம் கட்டி விருப்ப மனுக்களை சமர்ப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த மனுக்களை மார்ச் 5ம்தேதிக்குள் பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், விருப்ப மனு வாங்கும் தேதியை மார்ச் 3ம்தேதியாக குறைத்தனர். இதனால் நேற்றுடன் விருப்ப மனு வாங்குவது நிறைவடைந்தது.
முதல்வர் பழனிச்சாமி எடப்பாடி தொகுதியிலும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியிலும், தற்போதைய அமைச்சர்கள் அவர்கள் ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகளிலும், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் என ஏராளமானோர் விருப்ப மனு தாக்கல் செய்தனர். இவை அனைத்தும் நேற்று முடிவடைந்த நிலையில் 3 மாநிலத்துக்கும் சேர்த்து சுமார் 8,174 மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் 8000 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், விருப்ப மனுதாக்கல் செய்தவர்களுக்கு 3 மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு ஒட்டுமொத்தமாக இன்று ஒரே நாளில் நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் வந்ததும் அவர்கள் தலைமையிலும், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், வேணுகோபால், தமிழ் மகன் உசேன் ஆகியோர் முன்னிலையிலும் நேர்காணல் நடைபெற்றது.
காலை 9 மணிக்கு தொடங்கிய நேர்காணல் சுமார் 12 மணி நேரங்கள் நடைபெற்று தற்போது இரவு 8.40 மணி அளவில் நிறைவடைந்துள்ளது. ஜெயலலிதாக இருக்கும் போது 5 நாள் வரை நேர்காணல் நடைபெற்ற நிலையில் முதல்முறையாக ஒரே நாளில் அனைத்து மாவட்டங்களுக்கும் நேர்காணல் அதிமுக நேர்காணல் நடத்தியுள்ளது. ஏற்கனவே பட்டியலை ரெடி பண்ணி வைத்து விட்டு கண்துடைப்புக்காக மட்டுமே நேர்காணல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.